“சென்னையில் அதிகாலை இரவு நேரத்தில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? என மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்.”
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு. கடந்த 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தை பொறுத்த வரையில் ஒரு மாவட்டத்தில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிக அளவிலும் ஆறு மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பு விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பு விட மிகக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. தமிழக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்.
மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வபோது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகாலை இரவு நேரத்தில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? என்ற கேள்விக்கு அக்டோபர் மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இல்லை, வானம் மேகமூட்டம் இருக்கும் போது பனிமூட்டம் இருக்காது. காற்றிலும் மண்ணிலும் ஈரப்பதம் இருப்பதாலும் வாகனங்களின் புகை போன்றவற்றால் பனிமூட்டம் சூழல் இருக்கிறது என மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.