விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உத்திரபிரதேசத்தை சார்ந்த கொள்ளையர்களை விழுப்புரம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6½ லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதிகளில் கடந்த சில மாதமாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பறித்துச்செல்வது போன்ற குற்றச்செயல்கள் நடந்து வந்தன.இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட எஸ் பி. தீபக்சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் டி எஸ் பி சுரேஷ் மேற்பார்வையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரனை செய்ததில் 3 பேரும், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவை சார்ந்த சதாப் (வயது 35) இர்பான் (42), புதுடெல்லி ராஜீவ் நகரை சேர்ந்த அலாவுதீன் என விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் கடந்த 3.8.2023 அன்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த விக்கிரவாண்டி ஆசூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகன பெட்டியை திறந்து அதிலிருந்த 2 லட்சத்து 15 ஆயிரத்தை கொள்ளையடித்ததும், கடந்த 6.4.2024 அன்று மாலை விழுப்புரம் பாப்பான்குளம் சிவன் கோவில் அருகே நடந்துசென்ற விழுப்புரம்- சென்னை மெயின்ரோடு ஆர்.பி. நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி 13 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சதாப், இர்பான், அலாவுதீன் என்கிற அலி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 6½ லட்சமாகும்.

பின்னர் கைதான 3 பேரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகளும் மற்றும் விஜயவாடா, குண்டூர், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.