250 காவல் நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை-முதல்வர் ஸ்டாலின்

2 Min Read
முதல்வர் ஸ்டாலின்

தமிழக காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டித்தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நவீனமயமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் காவல் நிலையங்களின் தரத்தை மேம்படுத்தவும் அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு 250 காவல் நிலையங்களை மேம்படுத்த போவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

காவலர்கள், மக்கள் தொடர்பை மேம்படுத்த காவல் பணியாளர்களுக்கு அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காவல் துறை, பொதுமக்கள் இடையே “அன்பான அணுகுமுறை” என்ற நிலையை பேணிப்பாதுகாக்க இவ்வரசு உறுதிபூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று தமிழக முதல்வரால் 2023-2024-ம் ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கையின்போது தமிழக சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூபாய் 10 கோடி வழங்குவதற்கு நிர்வாக ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், காவல் நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்படுவதோடு, அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அணுகக்கூடிய வகையிலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இடமாகவும் காவல் நிலையங்கள் அமையும்” இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review