இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

3 Min Read
சீமான்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”இராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறையிலடைத்திருப்பது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கள இராணுவம் கடந்த சூன் மாதம் 9 இராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறித்து பின் விடுவித்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே 21 மீனவர்களை கைது செய்து சிறையிலடைத்ததுடன் அவர்களது 3 படகுகளையும் பறித்து அரசுடமையாக்கியது.

தமிழக படகுகள்

ஒரு மாதம் சிறை தண்டனைக்குப் பிறகு நேற்று முன்தினம் மீனவர்களை மட்டும் விடுத்த நிலையில், தற்போது மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்திருப்பதோடு, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதுமென இனவெறி சிங்கள கடற்படையினரின் அத்துமீறிய கொடுமைகளும், அட்டூழியங்களும் தொடர்ந்து வருவது இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. சிங்கள இனவாத இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைப்படுத்தி வருவது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

தமிழக படகுகள்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, முடமாகி நிற்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றி எச்சரித்ததுமில்லை.

இதன்விளைவாகத்தான், சிங்கள இராணுவம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பது என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலானது தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களை இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது எட்டுகோடி தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கு தமிழ்நாட்டு மீனவர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்திய ஒன்றிய அரசு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி, கட்சத்தீவினை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review