கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு 1250 கன அடி நீர் வரத்து அதிகரிப்பு. அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து 650 கன அடி நீர் வெளியேற்றம், தென்பண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாடும். தற்போது சாத்தனூர் அணையில் 116.5 அடி உயரம் தண்ணீர் நிரம்பியதால் கடந்த ஒரு வார காலமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு 1250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் அப்படியே சாத்தனூர் அணையின் பிரதான 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெள்ளம் அதிகரித்துச் செல்லும் நிலையில் பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடவும் கரையோரம் உள்ள கிராம பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்களை செல்ல அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.