விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மீட்டு தயிரியம் கூறி அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றதோடு நில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியினை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது .
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார் . கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா முன்னிலை வகித்தார் .

அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது , குமாரகோவில் சந்திப்பு அருகே இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொது மக்களால் மீட்கப்பட்டு சாலையோரம் அமர வைக்கப்பட்டிருந்தனர் .

அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என கருதி மனிதாபிமானத்தோடு அந்த இரு வாலிபர்களையும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக வாகனத்தில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் உடனடியாக மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதாபிமானம் மிக்க செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது . மேலும் கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனாவிற்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.