’’இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சி டா,’’ என்ற வாசகங்களுடன் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் – அவசர அவசரமாக பேனர்களை அகற்றிய போலீசார்.
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கோவை அருகே திரையரங்கம் முன்பு இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சிடா என்ற வாசகங்களுடன் ரசிகர்கள் வைத்த பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது.

குறிப்பாக அனைவரின் கவனமும் பெற்ற திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே லியோ சிறப்புக் காட்சி தொடர்பாக பிரச்சனை நீடித்து வந்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு படம் வெளியாக உள்ள நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு விஜய் ரசிகர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்தனர். சுமார் 75 நீள பிளக்ஸ் பேனர் ஒன்றில், ” கழுகு கூட்டம் மொத்தமும் காணாமல் போகும்டா.., இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சிடா .., “ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குறிப்பிட்ட வாசகங்கள் அடங்கிய பேனரை அகற்றுமாறு ரசிகர்களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி ராட்சத பேனர்கள் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய போலீசார், அங்கிருந்த பேனர்களை உடனடியாக அகற்றினர். இதனால் திரையரங்கு முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Leave a Reply
You must be logged in to post a comment.