கோயம்புத்தூர் மாட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அவர்களது குறைகளை கேட்டு அறிந்த வானதி சீனிவாசன், தாய் சேய் சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார்.

இதனை அடுத்து தாய் சேய் சிகிச்சை பிரிவில் பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு வானதி சீனிவாசன் ‘நரேந்திரன்’ என பெயர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இந்த ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானதி சீனிவாசன் பேசியதாவது,
‘கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து என்னென்ன வசதிகள் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்தேன்.பிரசவத்துக்கு வரும் பெண்களுடன் வருபவர்களுக்கு தங்க சரியான இடமில்லை என சொல்லி இருக்கிறார்கள். அதை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சில சமயங்களில் மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகள் இங்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருக்கின்றது. மருந்துகள் இருப்பில் இருக்க வேண்டும். தேவையானவற்றை வாங்கி வைக்க
அதற்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி உள்ளோம்.

மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற சூழல் இருப்பதை பார்க்க முடிந்தது. பிளாஸ்டிக் பேப்பர் ,கப் போன்றவை பயன்படுத்தபடுகின்றது. அதனை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் உணவு வழங்க வேண்டும் என சொல்லி இருக்கின்றேன்.
நிறைய நோயாளிகள் வரும் நிலையில், தேவையான கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்த சுகாதார துறை அமைச்சரிடம் வலியுறுத்தபடும்.மருத்துவமனையில்பார்க்கிங் வசதிக்காக மாநில அரசை வலியுறுத்த இருக்கின்றோம்.பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் கேட்கின்றனர் என்ற புகார் இருக்கின்றது. பணம் கொடுக்காதவர்களை சரியாக கவனிப்பதில்லை என்ற புகாரும் இருக்கிறது.
புகார் சொன்னால் அவர்களை செவிலியர்கள் மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். இது
மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உடனடியாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வழங்கப்படும் என அவர் சொல்லி இருக்கின்றார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக சட்ட மன்றத்தில் சொல்லி இருக்கிறார். நேற்று வெளிநடப்பு செய்ததால் நேரில் பார்க்க முடியவில்லை.

அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைக்கிறோம். 2004 -2014 வரை மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த பொழுது எந்த அளவு நிதி வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அதைவிட பல மடங்கு பிரதமர் தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார்.தமிழகத்தின் வருமானத்திலிருந்து, வேறு மாநிலத்திற்கு நிதி கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்.
கோவை மற்றும் கொங்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் வருமானத்திற்கு மாநில அரசு எதை திரும்ப செய்கிறது.விவசாய மாவட்டத்தில் இருந்து வருவதையும், தொழில் பகுதி மாவட்டத்தின் வருமானத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளை ஒரு அரசு செய்ய வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும்.
தமிழகத்தில் இருந்து வரும் நிதி மற்ற மாநிலத்திற்கு கொடுப்பது என்றால், கோவை வருமானத்தை எடுத்து முழுமையாக எங்கே செலவு செய்கின்றீர்கள்? தமிழகம் முழுவதும் சேர்த்து செலவு செய்கின்றீர்களா? என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்’ என கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.