சி.ஆர்.பி.எஃப் ஆட் சேர்ப்பு எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) துணை ஆய்வாளர்(Central Reserve Police Force- CRPF) மற்றும் தலைமைக் காவலர்( Head Constable) பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8 ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை இராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை இராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.