வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க விவகாரம் : இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளைப் பெற  இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நிலத்தை வகை மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க மூன்று வார அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
இதற்கிடையில், கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 194 பேர்  தரப்பில், நிலம் வள்ளலார் கோவிலுக்குச் சொந்தமானது எனக் கூற எந்த ஆவண ஆதாரங்களும் இல்லை எனவும், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களின் சர்வே எண்களை வழங்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதையடுத்து, அறநிலையத் துறையிடம் ஆவணங்களைக் கேட்டுப் பெற அறிவுறுத்திய நீதிபதிகள், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என நிரூபிக்க ஆவண ஆதாரங்களைத் தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் வழங்கி உத்தரவிட்டனர்.
அதேபோல, நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளைப் பெற்று, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
நிலம் வகைமாற்றம் செய்ததில் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, வள்ளலார் கோவில் அருகில் உள்ள நிலத்தில் சர்வதேச மையம் கட்டுமான பணிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share This Article

Leave a Reply