கொச்சி மீன்பிடி துறைமுகத்தின் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா!

2 Min Read
பர்ஷோத்தம் ரூபாலா

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் கேரளாவின் தோப்பும்பாடியில் உள்ள கொச்சி மீன்பிடி துறைமுகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

- Advertisement -
Ad imageAd image

இத்திட்டம் 169.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. மீன்வளத் துறையின் கீழ் (ரூ. 50 கோடி) பிரதமர் மத்ஸ்ய சம்பதா (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டம், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை  அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டம் (ரூ. 50 கோடி), பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு முதலீடு ரூ. 55.84 கோடி ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது.

திட்டத்தின் முதல் கட்டத்தில் மூன்று குளிரூட்டப்பட்ட ஏலக் கூடங்கள், ஒரு குளிரூட்டப்படாத கூடம், ஒரு மீன் பதப்படுத்தும் அலகு, பிற துணை அலகுகள் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தின் கீழ், உள் சாலைகள் அமைக்கப்படும், ஏற்றுதல் மற்றும் இறக்குதல் தளங்கள் கட்டப்படும், கழிவு மேலாண்மை பகுதி மேம்படுத்தப்படும். கேன்டீன் வசதிகள், ஓட்டுநர்கள் காத்திருக்கும் இடம், தூர்வாரும் பணி,  இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை இருக்கும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிரு  சர்பானந்த சோனோவால், ‘நமது பிரதமர் திரு நரேந்திர மோடி, உற்பத்தியை இரட்டிப்பாக்குவதையும், மீன்வளத் துறையை மேம்படுத்துவதையும் கவனத்தில் கொண்டுள்ளார்.  அவரது தலைமையின் கீழ், இரண்டு அமைச்சகங்களும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. கொச்சி மீன்பிடி துறைமுகத்தின் வளர்ச்சி மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

தோப்பும்பாடி துறைமுகம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 10 மாதங்கள் மீன்பிடி நடவடிக்கையின் உச்ச காலத்தைக் கொண்டுள்ளது. சராசரியாக, சுமார் 40 முதல் 60 படகுகள் துறைமுகத்தில் தரையிறங்குகின்றன, இது ஒரு நாளைக்கு 250 டன் மீன்களைப் பிடிக்க உதவுகிறது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தின் முதன்மையான சாகர்மாலா திட்டம், நாட்டின் கடல்சார் வளர்ச்சியில் 802 திட்டங்களுடன் ரூ. 5.5 லட்சம் கோடியை 2035க்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 202 திட்டங்கள் ரூ. 99,281 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 620 கோடி மதிப்பிலான 9 மீன்பிடித் துறைமுகத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 30,000 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 5 மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்கும் பணி ரூ. 550 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply