கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் செல்வி ஷா.தபித்தா சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். ஜனவரி 2023ம் வருடம் மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்பொழுது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வரும், செல்வி ஷா.தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுவதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தஉதயநிதி ஸ்டாலின் மிதிவண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீராங்கனை ஷா.தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான Argon 18 PRO (Complete bike) Competition Wheel Set, Mavic Front Five Spoke Wheel Set and Mavic Rear Disc Wheel set மிதிவண்டியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.