இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, முகாம் அலுவலகத்தில், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் முஹம்மது பஷீர், செயலாளர் முஹம்மது பெய்க், பொருளாளர் லியாகத் அலி, துணை செயலாளர் ஆரிப் சுல்தான் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் காசிம் முஸ்தபா,
முஹம்மது பாரூக், ஹனீபா ஆகியோர் சந்தித்து, இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக நன்றி தெரிவித்தனர்.
சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும்,

பிப்ரவரி 17 அன்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற ஆணைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையின மக்களின் வழிபாட்டு தலங்களான கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் மசூதிகள் ஆகியவற்றை புதிதாக கட்டுவதற்கும், ஏற்கனவே உள்ள வழிபாட்டு தலங்களை புனரமைப்பதற்கும் அரசு அனுமதி வழங்குவதில் இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை நீக்கி,

எளிமையாக்கி இதற்கான ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டதற்கு சமுதாய மக்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வின் போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உடனிருந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.