விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக பின்புறம் உள்ள பூங்கா பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இதனை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பொதுமக்கள் பொழுதைப் போக்க இப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றும், பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு பூங்காவும் உள்ளது. பழைய நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சிறிய பூங்காவை பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரத்தில் சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு ஏற்றம் போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தற்போது உடைந்து பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. மேலும் மாணவர்கள் விளையாடும் இடங்களில் புற்கள் வளர்ந்து புதர்கள் போல் காட்சியளிக்கின்றன.

பூங்காவில் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து தொங்குகின்றன. இவற்றை சீர் செய்யாமல் இருப்பதால் பூங்காவுக்கு வரும் போது மக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிமகன்கள் மது போதையில் காலையிலேயே வந்து உறங்குவதாலும் கல்லூரி மாணவ, மாணவிகள் அடிக்கடி வந்து செல்வதாலும் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளித்தபடியே செல்கின்றன. அதேபோல் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால் சிறுவர் விளையாடும் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், உபகரணங்கள் பழுதடைந்துள்ளது. பெரியவர்கள் உடற்பயிற்சி செய்யும் உதாரணங்களும் பராமரிப்பின்றி உள்ளது. மேலும் பூங்காவில் நடுவே உள்ள குளத்தில் அருகே உள்ள கழிவுநீர்கள் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில் தற்போது விடுமுறையில் இருக்கும் சிறுவர்கள் போக்குவதற்காக தங்களது பெற்றோருடன் இவ்விடத்திற்கு வரும் போது செப்பனிப்படாமல் இருப்பதால் கவலையுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பூங்காவை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பூங்காவின் பாதுகாப்பாக ஆட்களை நியமித்து தினந்தோறும் பராமரிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.