விழுப்புரம் மாவட்டம், அடுத்த மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் வயது (50). இவர் கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதத்திற்கு முன் நடுக்குப்பம் அருகில் உள்ள ஒரு இடத்தில் கட்டிட வேலை செய்து வந்து உள்ளார்.
அப்போது நாகப்பன், சிமெண்ட் மூட்டைகளை தூக்கி சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து நாகப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரால் நடக்க முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகப்பன் அவரது வீட்டில் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உறவினர்கள், கட்டிட வேலை நடந்த வீட்டின் உரிமையாளரிடம் நாகப்பனுக்கு போதிய இழப்பீடு கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் எந்த பதிலும் கூறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாகப்பன் உடலை ஆலத்தூர் – சென்னை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு தகவல் அறிந்த ஆலத்தூர் கிராம முக்கிய பிரமுகர்கள், சம்பவ இடத்திற்கு வந்து சாலை நடுவில் வைத்திருந்த சடலத்தை எடுத்து சாலையோரம் உள்ள புளிய மரத்தடியில் வைத்து விட்டு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மரக்காணம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மறியல் காரணமாக மரக்காணம் – பழைய சென்னை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.