ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு 109 நாட்களுக்குள் மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 5 வயது மகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகளை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை.

இது குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, அப்பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தினார் போலீசார். அப்போது கிடைத்த சிசிடிவி கேமராவில் தம்பதியின் மேல் வீட்டில் வசித்து வந்த அசாஃபக் ஆலம் என்ற 28 வயதான நபர் சிறுமியை மார்க்கெட் பகுதியில் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அசாஃபக் ஆலமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவன் கூறியபடி பார்க்க அருகே உள்ள காலி இடத்தில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய கெடுக்குபிடி விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டு அதிர வைத்தான் அசாஃபக் ஆலம். அவன் கூறியது பிரேத பரிசோதனை அறிக்கைகளும் உறுதி செய்யப்பட்டது. ஐந்து வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கொந்தளிப்பையும் ஒருசேர ஏற்படுத்தியது. சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் போனதால் மன்னித்துவிடு மகளே என கேரள காவல்துறை சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளியான அசாஃபக் ஆலமுக்கு மரண தண்டனையை விரைந்து வேண்டுமென்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்தன. மேலும் அசாஃபக் ஆலம் மீது ஏற்கனவே பீகாரில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையும் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானதையும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமி கொலை செய்த வழக்கில் அசாஃபக் ஆலம் மீது முப்பது நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மோகன்ராஜ் வாதாடினார். பின்னர் கடந்த 4-ம் தேதி சிறுமி கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் அசாஃபக் ஆலம் தான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் தண்டனை விவரம் நவம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி கே.சோமன் அசாஃபக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் நடந்த 100 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு 109 ஆவது நாளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் தினத்தன்று அநியாயமாக கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு நிம்மதி அளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கடுமையான தண்டனைகள் தான் குற்றங்கள் குறையும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.