கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த கருணாபுரம் பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மலை சாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவே பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. விஷச்சாராயம் குடித்தது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து,

புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோரை கைது செய்தனர்.

கோவிந்தராஜிடம் இருந்து, 200 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.