சீமான்
சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து தாயகம் மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே கடுமையான உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
சூடானில் உள்நாட்டு போர் நடைபெறும் இடத்தில் 200க்கு மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சாலைகளில் செல்லும் மக்கள் மீது துப்பாக்கிசூடும் நடத்தப்பட்டு வருகிறது.இதனால், தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது,” சூடான் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கு ஏற்பட்டுள்ள ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பணி காரணமாக சூடான் நாட்டிற்கு சென்ற உறவுகளை எண்ணி அவர்களின் குடும்பத்தினர் தவித்துநிற்கும் வேளையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து தாயகம் மீட்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.