மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.நேற்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் 2 விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் வங்கக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், சிறைப்பிடித்துச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது இனியும் தொடரக்கூடாது, முறியடிக்கப்பட வேண்டும்.
காரணம் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.
எனவே மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.