அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் தன்னைப் பற்றியும் அவதூறான தகவல் இருப்பதால் முதல்வர் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகஅமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியல் வெளியிட்டது குறித்தும், வாட்ச் பில் வெளியிட்டு இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , சொத்து பட்டியல் குறித்து திமுக தலைமையில் இருந்து உரிய விளக்கங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். பில் என காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த எக்ஸ் எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது என கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி , எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார், அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம் ரூபாய் எனவும் மாத மாதம் இதை யார் கொடுக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினார். ஒருமாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார் என கேள்வி எழுப்பினார்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா ? வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் அவரது நண்பரா? எனவும், யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திமுகவினர் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து பட்டியலை தூக்கிக்கொண்டு வருவதாகவும், அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அவரக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியத்தற்கு பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம் எனவும், பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கினது 4.5 லட்சம் ரூபாய் எனவும், அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக சொல்கிறார் எனவும், கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது எனவும், வாட்ச் நம்பரையும் மாற்றி மாற்றி சொல்கின்றார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார் எனவும் தெரிவித்தார்.
ஒரு வெகுமதியை மறைக்க , லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் அண்ணாமலை என தெரிவித்த அவர்,
பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம் ? என கேள்வி எழுப்பினார். தேர்தலின் போது வேட்பு மனுதாக்கலில் இதை ஏன் சொல்லவில்லை என கேட்பார்கள் என்பதற்காக இப்படி செய்கிறார் எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தேசியக் கட்சியில் இருப்பதால் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்கின்றார் எனவும், இன்று அவர் வெளியிட்ட பட்டியலில் எதுவுமே உண்மை இல்லை எனவும் தெரிவித்தார். ஒரு ஆதாரம் ,ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை 3.75 லட்சம் வாடகை, இதை யார் கொடுக்கிறார், காருக்கு யார் டீசல், பெட்ரோல் அடிக்கிறார் ,மூன்று உதவியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தூய்மையாக இருக்கின்றீங்க என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க என காட்டமாக கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னைவிட தனது மனைவி அதிகம் சம்பாதிப்பதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார் எனவும், அப்படி இருக்கும்போது ஏன் அடுத்தவன் காசில், அடுத்தவன் சொத்தில் வாழ்கின்றார் என கேள்வி எழுப்பினார். படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பேசும் டயலாக் போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைப் போல பயன்படுத்துவதெல்லாம் நான் தான், ஆனால் கொடுப்பதெல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இதுவே ஒரு அரசியல்வாதிக்கு அசிங்கமான விசயம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் , ஆனால் கோமாளித்தனமாக அண்ணாமலை செய்வதை டிவியில் ஒளிபரப்பி விட்டு, அதற்கு விளக்கமும் கேட்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார். கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம் , அந்த கட்சிக்கு தலைமை கோமாளியாக , கழிவு பொருளாக இருந்தால் என்ன செய்வது எனவும், தேசிய கட்சியில் இருந்தால் மட்டும் எல்லாம் வந்து விடுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
சாப்பிடும் சாப்பாடு,பெட்ரோல், சம்பளம், வீடு, மூளை எல்லலாமே அவருக்கு ஓசியாக இருக்கின்றது என கட்டமாக பேசிய செந்தில் பாலாஜி, அவர்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்து இருக்கின்றனர், தேர்தலில் எதை செய்யப் போகின்றனர் என்பதை சிந்தித்து தேர்தல் பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதை விட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து இன்று வெளியிட்டு இருக்கின்றார் எனவும், என்னைபற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார் எனவும், முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.