பெண் காவலர்கள் குறித்தும் , தமிழ் நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும், சமூகவலைதளங்களில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு 3 மணி அளவில் தேனி தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த சவுக்கு சங்கர் கைது செய்து கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை தேனியிலிருந்து கோவை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர் . கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் சிறிய விபத்துக்குள்ளானது.
இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, வரும் வழியில் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது . சிகிச்சைக்கு பின்னர் கோவைக்கு சவுக்கு சங்கரை மாற்று காவல் வாகனத்தில் அழைத்து சென்று கொண்டு இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

சங்கரின் கைதுக்கு அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் கண்டனம் :
இந்நிலையில் சவுக்கு சங்கரின் கைதுக்கு அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது X வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் .
அவர் தனது X வலைத்தள பதிவில் , நீதிமன்றங்கள் பலமுறை சவுக்கு சங்கரின் பதிவுகள் வன்முறையைத் தூண்டவில்லை அல்லது எரிச்சலூட்டவில்லை என்றால் அவரை கைது செய்ய எந்த அவசியம் இல்லை என்று காவல் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளது . அவர் கூறியது ஒருவருக்கு அவதூறாக இருந்தால், அவர் மீது அவதூறு வழக்குத் தொடர வேண்டுமே தவிர அவரை கைது செய்ய அவசியம் இல்லை என்று தெரிவித்த பின்னரும் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்க தக்கது என்று பதிவு செய்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.