கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படையினர் கடல் பகுதியில் கைப்பற்றினர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று முன் தினம் இரவு படகில் தங்கக்கட்டி கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினருடன் இணைந்து வேதாளை தென்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் வேகமாக வந்த நாட்டுப்படகு ஒன்றை மடக்கி பிடித்தனர். அந்த படகில் வேதாளை பகுதியைச் சேர்ந்த முகம்மது நாசர், அப்துல்ஹமீது மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,அவர்கள் அளித்த பதிலில் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வந்ததும், கடலோரக் காவல் படையினரை கண்டதும் அவற்றைக் கடலில் வீசிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடலோரக் காவல்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் வேதாளையைச் சேர்ந்த சாதிக் அலி, முகம்மது அசார் ஆகியோரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணைக்காக கைது செய்தனர்.
இந்நிலையில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை மீட்கும் முயற்சி நேற்று காலை தொடங்கி,மதியம் வரை நீடித்தது. இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள், புலனாய்வுத்துறையை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு மண்டபம் மனாலி தீவு கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிநவீன எக்கோ கருவி உள்ளிட்ட நவீன கருவிகளுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய தேடுதல் குழு இன்று பகலில் கடலில் இருந்து தங்கக்கட்டி அடங்கிய பார்சலை மீட்டது. அதில் 32 கிலோ மற்றும் 869.7கிராம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் 20.2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் முடிவில் 20 கிலோ தங்கக் கட்டிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த செயல் நீண்ட காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.