- இராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட கோரி மனு தாக்கல்.
ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- நீதிபதிகள் கேள்வி
எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? கோவில் ஆண்டு வருமானம் எவ்வளவு? ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? -நீதிபதிகள் கேள்வி
இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானது, பிரசித்தி பெற்றது. விதிப்படி இக்கோவிலில் 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 குருக்களும், 7 உதவி குருக்களும் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
100 கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு, கோவில் பராமரிப்பு, பணியிட பூர்த்தி போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. குருக்கள் பணியிடம் மட்டுமன்றி மணியம் ரிக் வேத பாராயணம், பாகவதர் உள்ளிட்ட 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. பல சந்ததிகளில் குருக்கள் இல்லை.
எனவே ராமநாதசுவாமி திருக்கோவிலின் பணியிடங்களை நிரப்பி பூஜைகள் உள்ளிட்டவை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு,

“இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. ” வசூல்ராஜா எம்பிபிஎஸ் வேலை மட்டுமே செய்கிறது” என தெரிவித்தனர். தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? ஆண்டு வருமானம் எவ்வளவு? ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? கோவிலில் உள்ள சந்நிதிகள் எத்தனை? என்பது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர், அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலின் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.