மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் முதல் தலைவர் நீங்கள் தான். 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நீங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஆற்றிய பணிகள் தான் இந்த வெற்றியை உங்களுக்குத் தேடித் தந்திருக்கின்றன. நாட்டு மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் மறு உறுதி செய்திருக்கின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பிரதமராக நீங்கள் ஆற்றிய பணிகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதைக்குரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. அதன் மீது வளமான, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவீர்கள்; பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றவும், சிறப்பான ஆட்சியை வழங்கவும் பா.ம.க. சார்பில் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply
You must be logged in to post a comment.