குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தலைமறைவாகி இருந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 30, கூலி தொழிலாளி . இவர் மாம்பழஞ்சி பகுதியை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார் . மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் வேலைக்கு ஏதும் செல்லாமல் அவரது மனைவி சௌமியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் .
இந்த நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு சௌமியா வீட்டில் தனிமையில் இருக்கும்போது அங்கு வந்த ராஜேஷ் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் . மேலும் அவர்களது தகராறு வாக்குவாதமாக மாறியது . அதிக போதையிலிருந்த ராஜேஷ் மேலும் குடிக்க பணம் கேட்டு சௌமியாவை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளார் .
ஒரு கட்டத்தில் ராஜேஷ் அருகில் இருந்த அருவாமனையால் சௌமியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் . மேலும் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் .
இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ் 2021 ம் ஆண்டு முதல் வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார் .
4
இதனால் நீதிமன்றம் ராஜேஷை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது . நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ராஜேஷை தேடி வந்தனர் . இந்த நிலையில் நேற்று காஞ்சாம்புறம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு ராஜேஷ் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.