பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவன நாள் விழா பாட்னாவில் நடைபெற்றது. இந்த விழாவில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-
நமது கட்சியின் ஆணி வேரான தொண்டர்களுக்கு ஒரு செய்தியை இங்கு கூற விரும்புகிறேன். மீண்டும் மக்களவை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பலவீனமான அரசாக அது உள்ளது. அந்த கூட்டணி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கவிழ்ந்து விடும். எனவே, தொண்டர்கள் தேர்தலில் பணியாற்ற தயாராக இருங்கள். இங்குள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சி தங்கள் கொள்கைகளில் இருந்து சமரசம் செய்து கொண்டு ஆட்சி, அதிகாரத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் எப்போதும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது. இப்போதும், இதற்கு முன்பும் பாஜகவிடம் நாங்கள் மண்டியிட்டது கிடையாது. கடந்த மக்களவை தேர்தலில் நமது கட்சியின் வாக்கு சதவீதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. இன்றும் நாம் 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எதிர்வரும் தேர்தல்களில் இதை விட அதிகம் பெறுவோம்.
கடந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 9 இடங்களில் வென்றோம். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.