கோவை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர் மற்றும் செல்வபுரம் பகுதியில் உள்ள செல்வசிந்தாமணி குளம் ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த,’நேற்று பெய்த கனமழை காரணமாக கோவையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்புக்கு உள்ளானதையடுத்து முதல்வர் அவர்கள் மக்கள் பாதிக்காத வகையில் பணிகளை செய்ய உத்தரவிட்டார்கள். அதற்காக பார்வையிட வந்தோம். சில இடங்களில் வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டி உள்ளது. அவிநாசி பழைய மேம்பாலம் அருகே பெரிய அளவில் ஆழ்துளை கிணறு வெட்டி, புதிய மின் மோட்டார் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் திட்டத்தை கூறியுள்ளனர். ஏழு இடங்களில் இருந்து படிப்படியாக வரக்கூடிய தண்ணீரை முறைப்படி குளங்களில் சேர்ப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளோம்.

அதற்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்கள். கோவையில் நீர்வளத்துறை சார்பாக பல இடங்களில் தூர்வாராமல் இருந்த பகுதிகளில் தூர்வாரவும், நெடுஞ்சாலைத்துறை மூலமாக கல்வெட்டுக்கள் கட்டவும் வலியுறுத்தப்பட்டு, விரைவில் இந்த பணிகள் துவங்க உள்ளது. இப்போது செய்யும் இந்த பணிகள் எப்போதும் பயன் அளிக்கும் வகையில் செய்யப்பட உள்ளது. தற்போது எவ்வளவு மழை பெய்தாலும் ஆங்காங்கே மின்மோட்டார் அமைத்து, சென்னையில் செய்வது போல கோவையில் மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவு தரப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மோட்டாரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.
செல்வசிந்தாமணி குளத்தை பொருத்தவரை சாலையை அகலப்படுத்தி மேலே கான்கிரீட் போட்டு, கீழே தண்ணீர் போகும் அளவிற்கு 50 கோடி மதிப்பீட்டில் திட்டம் முன்வைத்துள்ளனர். அதன்படி அங்கு வாய்க்கால்கள் அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நீர்வளத்துறையின் சார்பாக ஏற்கனவே ஒரு வாய்க்கால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு தூர்வாரும் பணிகளை செய்து வருகிறோம். நகரத்தில் இருக்கக்கூடிய வாய்க்கால்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளோம். இல்லை என்றால் அவர்களே தூர்வார வேண்டும். மாநகராட்சி செய்யவில்லை என்றால் நீர்வளத் துறை சார்பில் எங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் பணிகள் செய்யப்படும்.

கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் உணவு உள்ளிட்ட நிவாரண பணிகள் வழங்கப்பட்டது. பத்து நாட்களுக்குள் கோவையில் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படும். தண்ணீர் உள்ளே இருக்கக்கூடிய ஆகாயத்தாமரையும், தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள ஆகாயத்தாமரையும் அகற்றப்படும். சாலை போடுவதற்காக 200 கோடி ரூபாய் முதல்வர் கொடுத்துள்ளார். 208 சாலைகள் போடாமல் இருந்தது. தற்போது போடப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு போன்ற பணிகளுக்காகவும், சூயஸ் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் ஆங்காங்கே சாலைகள் சேதப்படுத்தப்படுகிறது. அதை கண்காணித்து வருகிறோம்.
சாலைகள் தரமாக இல்லை என்றால், அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தரம் உறுதி செய்யப்படும். வரும் டிசம்பர் மாதத்துக்குள் வாலாங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடையும். நிரந்தர தீர்வு காண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.’ என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.