மீஞ்சூரில் இளைஞர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த ஞாயிறு அதிகாலை துணியால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், மீஞ்சூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனிடையே சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் உள்ள சமாதியில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த விசாரணையில், வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின்குமார் (26) கொலை செய்யப்பட்டு தலை மற்றும் உடலை தனியே வீசியது தெரியவந்தது.

அப்போது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற அவ்ஜா (21) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அஜீத் தம்முடைய வாக்குமூலத்தில் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது, தம்முடைய உறவுக்கார பெண்ணை அஸ்வின் காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த முன் விரோதம் காரணமாக அஜய், மோகன் மற்றும் சிலருடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.