திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருதலைபட்சமான முடிவாக விளங்குவதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தமான கேள்விகளை முன்னெழுப்பியவர். அதானி குழுமம் தொடர்பாகவும் பிரதமர் மோடிதொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான கேள்விகளைத் தொடுத்தவர். அவரது சீரிய செயல்பாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் போலியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
அவர் மீதான விசாரணை 500 பக்க அறிக்கையை சில மணி நேரத்தில் படித்து மக்களவையில் விவாதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நெறிமுறைகள் குழுவின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதும் அதில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாதங்கள் உறுப்பினர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தலைபட்சமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கும் வாய்ப்பளிக்காதது வேதனை அளிக்கிறது.

தனக்கு எதிராக வலுவாகக் களமாடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சர்வாதிகாரப் போக்கோடு ஒடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டிருப்பது இந்திய ஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல். நமது நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதின் சான்றாக மஹூவா மொய்த்ராவின் எம் பி பதவி பறிப்பு அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.