- குழந்தைகள் விருப்பத்தின் பேரில் தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், தாயின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு பெண் ஒருவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவில், தன் குழந்தைகள் இருவரையும், அவர்களது தந்தை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும் இருவரையும் மீட்டு, தன்னிடம் ஒப்படைக்க வளசரவாக்கம் போலீசாருக்கு
உத்தரவிட வேண்டுமென
கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குழந்தைகள் இருவரும், தந்தையுடன் ஆஜராகினர். குழந்தைகளை அருகில் அழைத்த நீதிபதிகள், இருவரிடம் பேசினர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் தொடர்புடைய குழந்தைகளின் பெற்றோர்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம், இவர்களுக்கு விவகாரத்து வழங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் தற்போது, சென்னை வளசரவாக்கத்தில் தந்தை மற்றும் தாத்தாவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வசித்து வரும் நிலையில்
தந்தையின் சட்டவிரோத காவலில் இரு குழந்தைகளும் இல்லை என்பதை அவர்களை நேரில் அழைத்து பேசியதன் மூலம் அறியமுடிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் இருவரும், பள்ளியின் டாப்பர்ஸ். சட்டவிரோத காவலில் இரு குழந்தைகளும் இல்லை.
இதை, அவர்களை அழைத்து விசாரித்ததில் அறிய முடிகிறது. குழந்தைகள் இருவரும் தாயுடன் செல்ல விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்தை தெளிவாக தெரிவித்துள்ளனர்.
உலகளவில் குழந்தைகளின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன அதன்படி, இந்த வழக்கில் குழந்தைகள் இருவரின் விருப்பம், உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே, தாயின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.குழந்தைகள் இருவரும் அவர்களின் விருப்பப்படி, தந்தையுடன் செல்லலாம்.
இந்த உத்தரவை பிறப்பித்த பின், இரண்டு குழந்தைகளும் நீதிபதிகள் அருகில் சென்றனர். அவர்களிடம், ‘நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா’ என, நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இருவரும், ‘நன்றி’ என சிரித்தபடி தமிழில் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து, நீதிமன்றத்தில் இருந்த குழந்தைகளின் தாயார், கண்கலங்கியபடி வெளியே சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.