கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல் நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 66 பேர் நலமுடன் வீடு திரும்பினர். அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அந்தவகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் இருந்து 96 பேரும், புதுவை ஜிப்மரில் இருந்து 6 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து 22 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 2 பேரும், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேரும்,

சென்னை ராயப்பேட்டையில் இருந்து ஒருவர் என 129 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். விஷச்சாராயத்துக்கு 63 பேர் பலியாகி இருந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் மகேஷ் (41) என்பவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச்சாராயத்துக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனிடையே அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 4 பேர், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலியை தொடர்ந்து கள்ளசாராயம் வியாபாரம் செய்வோர் மற்றும் கடத்துபவர்களை கைது செய்ய எஸ்.பி ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த பிரபல கள்ளசாராய வியாபாரியும் அதிமுக முன்னாள் கிளை செயலாளருமான மணிகண்டனை (42) சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 4 பேர் தப்பினர்.
இதில் ஒருவர் வேறு ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களை போலீசார் கண்டுபிடித்து மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.