சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் கைது மாணவிகள் கொடுத்த தொடர்பாலியில் புகார் காரணமாக போலீசார் நடவடிக்கை
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும், தொந்தரவு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் கலை நிகழ்ச்சிக்காக ஹைதரபாத் சென்றிருந்த பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் போலீசார் டவரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியுடன் படித்த மூன்று சக தோழியிடம் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தி விவரங்களை பெற்றனர்.
இந்த நிலையில் ஹைதரபாத்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்ற ஹரிபத்மன் நேற்றிரவு சென்னை திரும்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்று அதிகாலை மாதவரத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிபத்மனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல எத்தனை மாணவிகளுக்கு பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளிடம் எத்தனை மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளார், வேறு ஏதும் விவரங்கள் எடுத்து வைத்துள்ளாரா என போலீசார் ஹரி பத்மனின் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏதேனும் செல்போனில் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.