கரூரில் நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை.
கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் நிறுவனங்கள் அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வரும் நிலையில்,
வெள்ளிக்கிழமை காலை கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை சனிக்கிழமை இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 மணியளவில் கரூர் ஆண்டாங்கோயிலில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் நிறுவனங்கள் அவரது தம்பி சேகர் வீடு, ரெயின்போ நகரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை மற்றும் திருவிக நகரில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் ஆகிய 4 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.