கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது.

இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் சுப்பிரமணியன், கடலூர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் ஆதாயத்துக்காக நடைபெறவில்லை.

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் செய்தது குற்றம் என்றாலும், உயிரிழந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன குற்றம் செய்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் தமிழக முதல்வர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளார்.
இதைக்கூட சில அரசியல் கட்சியினர் குறை கூறி வருகின்றனர். விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் மற்றவர்களும் குடித்து விட்டு இறந்து விடுவார்கள் என ஏளனம் பேசி வருகின்றனர்.

மேலும் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இரவு பகல் பாராமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பு குழுவினர் அமைத்து தீவிர சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
சமுதாயத்தில் மதுப்பழக்கம் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கள்ளச்சாராய சம்பவம் அனைவருக்கும் உணர்த்தி உள்ளது. இதுபோன்ற விஷச்சாராய உயிரிழப்புகள் பல நூற்றாண்டு காலமாக உள்ளது. இது ஆட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. எந்த ஆட்சி வந்தாலும் நடைபெறுகிறது.

இந்த விஷச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு பின்புலம் உள்ள முக்கிய குற்றவாளிகள் அரசியல் அதிகாரமிக்கவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும். கல்வராயன்மலை என்பது தற்போது கள்ளச்சாராய மலையாக உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் உரிய விசாரணை செய்ய வேண்டும். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நினைத்தால் கள்ளசாராயம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் என்பது தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கள்ளக்குறிச்சி சம்பவமே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.