வாச்சாத்தி வழங்கின் தீர்ப்பு, தாமதப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் வரவேற்கதக்க தீர்ப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், “தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமம் 1992-ஆம் தமிழக காவல் அதிகாரி மற்றும் வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வந்து இருக்கிறது. தாமதமான தீர்ப்பாக இருந்தாலும் வரவேற்கதக்க தீர்ப்பு. காலம் கடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வென்றுள்ளது. மகிழ்ச்சியளிக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் 1992-ஆம் ஆண்டு சந்தன மரம் கடத்தல் தொடர்பாக ஆய்வுக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும், அக்கிராம மக்களை தாக்கியும், அவர்களின் வீடுகளை சூரையாடியும், அங்குள்ள 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கிராம மக்களால் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட 155, வனத்துறையினர், 108 போலிஸ்துறையினர், 6 வருவாய்துறையினர் என்று 269 பேரும், இதில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வனத்துறையினர் 17 பேரையும் குற்றவாளியாக அறிவித்தது.
இந்நிலையில் வழக்கின் மேல்முறையிட்டில் தற்பொழுது உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேர்களுக்கு 10-லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதில் குற்றமிழைத்தவர்கள் 5 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது 215 பேர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு தீர்ப்பு வெளிவந்துள்ளது. தாமதிக்கப்பட்ட தீர்ப்பாக இருந்த பொழுதும், வரவேற்க தக்க தீர்ப்பாக அமைந்துள்ளது.

மக்களை காக்க வேண்டிய காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளே குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணம். இந்த தீர்ப்பின் படி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் தீர்ப்பு வந்துள்ளது. இத்தீர்ப்பை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.