அரசியலில் இருந்து என்னை போக வைப்பது மிகவும் கஷ்டம்’ என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் பேசினார்.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் என்றும் என்னை அவ்வளவு சீக்கிரத்தில் அரசியலை விட்டு போக வைக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இங்கு இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிக்கு பெயர் வைத்தார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நேற்று 7வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது;- நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது என்று சொல்கிறார்கள். முழுநேர அரசியல்வாதி என்பவர் யார்? ஒருவரும் கிடையாது என்பதே உண்மை.
கோவையில் தோற்றேன் என்பது 1,728 வாக்குகளால் அல்ல. 90,000 பேர் அந்த தொகுதியில் வாக்களிக்கவில்லை. இதைத்தான் எனது தோல்வியாக நினைக்கிறேன். இந்தியா முழுவதும் 40 சதவீத மக்கள் வாக்களிப்பது இல்லை. அவர்கள் அனைவரும் வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

அப்போது முழு நேர அரசியல்வாதி யார் என்று என்னை கேள்வி கேட்பவர்கள், வாக்களிக்காத இந்த 40 சதவீதம் யார் என்று கேட்க முடியுமா? இதுபோன்ற நிலையில், 95 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்யும் நேர்மையானவன் வெற்றி பெறவே முடியாது. என்னை அரசியலுக்கு வரவழைப்பது கஷ்டம் என்றார்கள்.

ஆனால், போக வைப்பது அதைவிட கஷ்டம். எஞ்சிய வாழ்நாள் முழுக்க இனி இப்படித்தான். இனி எனது எல்லாம் உங்களுடையது தான். அப்போது விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்திருக்கக்கூடிய விஷயத்தில் 10 சதவீதம் கூட ஒன்றியம் செய்யவில்லை.

டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.