- ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி வழங்கியதற்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 96 லட்சம் ரூபாயை கலைப்பு அதிகாரிக்கு செலுத்தும்படி குஜராத் மாநில அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி வழங்குவது தொடர்பாக, எவர் ஆன் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேகொள்ளப்பட்டது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்ற கலைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற கலைப்பு அதிகாரி, எவர் ஆன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே 99 லட்சம் ரூபாயில், ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயை மட்டும் குஜராத் அரசு வழங்கியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயை, 2017ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியுடன் கலைப்பு அதிகாரிடம் செலுத்தும்படி குஜராத் மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் மாநில தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கம்ப்யூட்டர் கல்வித் திட்டம் வெற்றிகரமாக முடித்துள்ளதா என, திருப்தியடையாமல், திட்டத்துக்கான தொகையை வழங்கும்படி வற்புறுத்த முடியாது எனவும், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயை கலைப்பு அதிகாரியிடம் செலுத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.