- தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் ஆசான் நினைவு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-19 ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை செலுத்தாமல் உள்ள 76 ஆயிரத்து 275 ரூபாய் கட்டண பாக்கியை 12 சதவீத வட்டியுடன் செலுத்த மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண வசூல் முறைப்படுத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என கட்டண நிர்ணயக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப தான் கட்டணம் வசூலிக்கிறதா என சரிபார்க்க வகை செய்யும் சட்டப்பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளை தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறி, பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்றபடி தான் கட்டணம் வசூலிக்கிறதா என சரிபார்க்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/stamp-exhibition-organized-by-the-indian-postal-department-yesterday-at-tanjore-tamil-university-a-large-number-of-students-enjoyed-it/
மாணவியின் தந்தை தரப்பில், 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை அக்டோபர் 18ம் தேதிக்குள் செலுத்திவிடுவதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பள்ளியின் கட்டண விவரங்கள் குறித்து சரிபார்க்கும்படி, கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.