அதிமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இது அதிமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், அடுத்த பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் அருள்முருகன்.

இவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் சேர்ந்து பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்தும் கோழி தீவன விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கோழிப்பண்ணைகளின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ளது. கோழிப்பண்ணைகளுக்கான அனைத்து கணக்கு வழக்குகள் இந்த அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே வருமான வரித்துறையின் பொள்ளாச்சி கிளை அலுவலகமும் உள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசா காலனியில் இந்த கோழிப்பண்ணை தலைமை அலுவலகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பல கோடி ரூபாய் பதுக்கி வைத்ததாக வருமான வரித்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து திடீரென வருமான வரித்துறையினர் தனி வாகனத்தில் கோழிப்பண்ணை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிமையாளர்கள் அருள்முருகன், சரவணமுருகன் ஆகியோரை வரவழைத்தனர்.
இரவில் பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்களை உள்ளேயே வைத்து விசாரித்தனர். விடிய விடிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.32 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அப்போது நேற்று காலையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அப்போது தேர்தல் நேரத்தில் அதிமுக ஆதரவாளர்கள் கோழிப்பண்ணையில் கணக்கில் வராத பணம் ரூ.32 கோடி பிடிபட்டதால் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 7-ம் தேதி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பா 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.