அதிமுக மாநாட்டில் முதல்வர் குடும்பத்தை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கேவலப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து எடப்பாடி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணை பொதுசெயலாளர் பதவி ராஜினாமா செய்கிறேன் என நீலகிரி எம்.பி ஆ.ராசா தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் ஞாயிற்று கிழமை பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நடைபெறுகின்றது. விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என். நேரு இன்று மாலை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் முத்துசாமி, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பில்லூர் 3-வது திட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி அவர்கள் பில்லூர் 3-வது திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் எனவும், சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டதால் வாரம் ஒரு முறை ,10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது என தெரிவித்தார்.

பில்லூர் 3 திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமியிடம் கோவை மாஸ்டர் பிளான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கோவையில் மாஸ்டர் பிளான் தயாராக உள்ளது. பின்னர் விரைவில் வெளியிடபடும். மேலும் 30 வருடத்திற்கு தேவையான பணிகள் அதில் செய்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிதி வழங்குவதில் இருக்கும் பாரபட்சம் குறித்து நீலகிரி எம்.பி ஆ. ராசாவிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பி கொண்டு இருக்கின்றனர்.
அப்போது கவுண்டமணி வாழைப்பழ கதை மாதிரி பேசுகின்றனர் எனவும் தெரிவித்தார். அதிமுகவினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் குறித்து பேச ஆ. ராசாவிற்கு தகுதியில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஆ.ராசா, “எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என” பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு யோக்கியதை இல்லை என தெரிவித்தார். எம்.ஜி.ஆர் குறித்து நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும்.
அவரிடம் திரும்பி கேட்கின்றேன், உங்கள் கேபினட்டில் இருந்த ஒரு அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி, அவர் மீது உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது என தெரிவித்தார். மேலும் அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது.

அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தி இருந்தீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன் என தெரிவித்தார்.
எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு , அது தனி கதை அதை தனியாக பேசுவோம் என தெரிவித்த ஆ.ராசா, அதற்கு வருத்தம் தெரிவித்து பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் செய்கிறேன் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.