செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தந்தால் விசாரணையை கட்டாயம் தடுப்பார் – அமலாக்கத்துறை..!

2 Min Read

செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால், அவர் தன் சுதந்திரத்தை பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தி, விசாரணையை தடுக்க வாய்ப்புள்ளது என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14-ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு, ஏற்கனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த 2 மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு நீதிபதி எஸ். அல்லி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி துணை இயக்குநர் கார்த்திக் தாசரி சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார். சட்ட விரோத வழக்கு விசாரணையின் துவக்க நிலையில் இருந்தே, மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஒத்துழைத்ததாக கூறுவது தவறு. மனுதாரர் கைது செய்யப்பட்டது.

சட்டவிரோதம் அல்ல. கைது குறித்து, அவரின் குடும்ப உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இவற்றை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. நீதிமன்றத்தில், ஏற்கனவே டிஜிட்டல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு மனுதாரரிடம் விசாரணை நிறைவு பெற்று விட்டது. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதாலும், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக கருத முடியாது. கைது செய்யப்பட்டு சிறையில், 182 நாட்களாக இருப்பதாக கூறுவது தவறு.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

இலாகா இல்லாத அமைச்சராக, ஜூன் 14 முதல் ஜூலை 17 வரை, மருத்துவமனையில் இருந்துள்ளார். ஜூலை, 17 முதல் அக்டோபர் 9 வரை, சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். மனுதாரர், தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் அவர், சக்தி மற்றும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் அனைத்து முக்கிய உண்மைகளையும் மறைத்து, மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் நோக்கில், மீண்டும், மீண்டும் அதே காரணங்கள் அடிப்படையில் ஜாமின் கேட்டுள்ளார். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிபதி எஸ். அல்லி, இருதரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.

Share This Article

Leave a Reply