கோவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வரும் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரால், பேரூராட்சி தேர்தலில் நின்று கூட வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கோவை குனியமுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய ஜவாஹிருல்லா, அனைத்து மத வழிபாட்டு தளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் ,கட்சிகள் அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மத்திய அரசின் திசையை மாற்றும் தேர்தலாக இருக்கும் எனக் கூறியவர், இந்தியா கூட்டணி ஏற்கனவே மூன்று முறை ஒன்று கூடி ஆலோசித்துள்ளது. இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்த காங்கிரஸ் பிற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக காட்சிகள் அரங்கேற்றப்படுவதாகவும், இதுவரை மத்திய அரசுக்கு எதிரான எந்த கருத்தையும் எடப்பாடி பழனிச்சாமி முன் வைக்கவில்லை என கூறினார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தாங்கள் ஆதரிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகள் 20 பேரை நீண்ட விடுப்பில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஆளுநர் அந்த கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரும் சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும் ஆளுநரால், ஒரு பேரூராட்சி தேர்தலாவது நின்று வெற்றி பெற இயலுமா என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் யார் படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நீட் தேர்வின் நிலை குறித்து பொது மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.