லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம் 7.70 லட்சம் மோசடி செய்ததாக 9 பேர் கும்பலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில், பீளமேடு பகுதியை சேர்ந்த 43 வயதான கல்லூரி பேராசிரியர். கடந்த மாதம் லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளத்தில் கால் கேர்ள்ஸ் சர்வீஸ் மற்றும் மசாஜ் சர்வீஸ் ஆகியவற்றை தேடியுள்ளார். அந்த இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பெண்களை ஏற்பாடு செய்வதாகவும், அதே வேளையில் பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் முன்பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி பணம் பெற்றுள்ளார். மேலும் பல இளம் பெண்களின் புகைப்படங்களை பேராசிரியருக்கு அனுப்பிய அவர், பல தவணைகளாக 7.70 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.

பணத்தை வாங்கிய பின் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியர் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லோகாண்டோ இணையதளத்தின் “URL” மற்றும் வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிவர்த்தனைகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் எண்கள் ஆகியவற்றை போலீஸார் சோதனை செய்ததில், மோசடி செய்தவர்கள், கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் தலைமையில் செயல்பட்ட 9 பேர் கும்பல் என்பது தெரியவந்தது.
பின்னர், ஹரி பிரசாத் சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்பதற்காக, தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு இத்தகைய மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. லோகாண்டோ இணையதளத்தில் ஆயுர்வேத மசாஜ் மற்றும் கால் கேர்ள் சர்வீஸ் தமிழகம் முழுவதும் செய்யபடும் என விளம்பரம் செய்து வந்ததுடன் , போலீசாரிடம் சிக்காமல் தவிர்க்க மும்பை, கோவா, ஹைதராபாத், பெங்களூரு என பல்வேறு இடங்களுக்கு இருப்பிடங்களை மாற்றி வந்ததும் தெரிய வந்தது. கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் இருந்து இந்த மோசடி செய்திருப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் பெங்களூர் சென்று ஒன்பது பேரையும் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த எம். ஹரி பிரசாத், வி.மகேந்திரன், சக்திவேல், சரவணமூர்த்தி, அருண்குமார், எம். சக்திவேல், ஜெயபாரதி, கே.மகேந்திரன், கோகுல் ஆகிய 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிபதி இல்லத்தில் அஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த நபர்கள் வெளி மாநிலங்களில் முகாமிட்டு மோசடி செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.