கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நிறுவனத்தை ஒட்டியுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகின்றனர்.மேலும், இந்த நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மாதவ்(23), தனஞ்ஜெய்(24),தரம் பீர்(35),வீரேந்தர்(36), அனுராக்(26) உள்ளிட்ட ஐந்து பேரும் ஒன்றாக அறை எடுத்து தங்கி உள்ளனர்.நேற்று ஞாயிறு என்பதால் அறையிலேயே சமைத்துள்ளனர். அப்போது,வீட்டில் இருந்த கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஐந்து பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும்,படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கேஸ் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வட மாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்த சம்பவம் சக தொழிலாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.