திருநெல்வேலி, இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி முத்துமாரி (28). தமிழரசன் ராணுவத்தில் வேலை பார்த்து வருவதால் மனைவி முத்துமாரி கணவன் வீட்டில் மாமனார் தங்கராஜுடன் (50) வசித்து வந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் தனது வீட்டை மகன் தமிழரசனின் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.
இந்த சூழலில், மகன் வெளிமாநிலத்தில் ராணுவ பணி செய்து வருவதால், மருமகள் முத்துமாரியுடன் தங்கராஜ் அதே வீட்டில் வசித்து வந்தார். தங்கராஜுக்கு மனைவி இல்லை. அவர் இறந்துவிட்ட பிறகு வேறொரு பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் தனியாக வசிக்க விரும்பியுள்ளார். ஆனால், அந்த வீடு தமிழரசனின் பெயரில் இருப்பதால் வீட்டை தன் மீது மாற்றிக்கொடுமாறு மகனுக்கு போன் போட்டு அடிக்கடி கேட்டு வந்துள்ளார் தங்கராஜ்.
ஆனால், தமிழரசன் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக மருமகளுக்கும் மாமனாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழரசன் விடுமுறை கிடைத்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது, தங்கராஜ் ”தான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் எனவே வீட்டு உரிமையை தன் மீது மாற்றிக்கொடுத்துவிட்டு நீங்கள் வேறு வீட்டுக்கு செல்லுங்கள்” என மகனிடம் கூறியுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், மருமகள் முத்துமாரி மரியாதைக்குறைவாக தங்கராஜுவை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார், தன் மகன் வெளியில் சென்ற நேரம் பார்த்து முத்துமாரியின் தலையில் கம்பியால் ஓங்கி அடித்துள்ளார். அதில் மண்டை உடைந்து அதிக ரத்தம் வெளியேறி முத்துமாரி சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வந்ததும் தங்கராஜ் அங்கிருந்து தப்பியோடினார். இதனை தொடர்ந்து முத்துமாரி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீசார் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் முத்துமாரி இறந்ததும் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மாமரை தேடி வருகின்றனர்.
நெல்லையில் பல் பிடுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த சம்பவத்தை மறக்கடிக்கும் வகையில் இன்னொரு பகீர் சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதி மக்களை வியப்படைய வைத்திருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.