மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடந்து முடிந்துள்ள நிலையில்,
தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜூலை 10 ஆம் தேதி காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர், 11 ஆம் தேதி சிவகங்கை – வேலூர் – திருவண்ணாமலை, 12 ஆம் தேதி அரக்கோணம் – தஞ்சாவூர் – திருச்சி, 13 ஆம் தேதி சிதம்பரம் – மதுரை – பெரம்பலூர், 15 ஆம் தேதி நாகப்பட்டினம் – மயிலாடுதுறை – கிருஷ்ணகிரி,
16 ஆம் தேதி ராமநாதபுரம் – திருநெல்வேலி – விருதுநகர், 17 ஆம் தேதி தென்காசி – தேனி – திண்டுக்கல், 18 ஆம் தேதி பொள்ளாச்சி – நீலகிரி – கோயம்புத்தூர், 19 ஆம் தேதி விழுப்புரம் – கன்னியாகுமரி – ஆரணி ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்,

தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர்கள்,

மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர்கள், நகர மன்றத்தலைவர், பேரூராட்சி மன்றத்தலைவர்கள், மண்டல குழுத்தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் மட்டும் தவறாமல் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.