- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கில், வாக்குமூலம் அளிப்பதற்காக, புகார்தாரரான திமுக எம்.பி. தயாநிதி மாறன் செப்டம்பர் 25ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகி, குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்தார். பின்னர், புகார்தாரரான தயாநிதி மாறன் வாக்குமூலம் அளிப்பதற்காக விசாரணை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
வழக்கு, நீதிபதி ஜெயவேல் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, புகார்தாரரான தயாநிதி மாறன் ஆஜராகவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் ஆஜராக இயலவில்லை என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் புகார்தாரரின் வாக்குமூலத்தை பதிவு செய்தவற்காக விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்து தயாநிதி மாறன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனக்கு வயது 70 ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாகவும் மருத்தவ காரணங்களால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதால்,
அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.