கடலூர் மாவட்டம், அருகே காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார். ஐ.டி ஊழியரான இவர், ஐதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த் குமார் தனது பாட்டியான கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுதன்குமார் காரமணி குப்பம் வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து புகை நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் நேரில் நெல்லிகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.

அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுதன்குமார், அவரது தாயார் கமலீஸ்வரி, அவரது மகன் நிஷாந்த் குமார் மூவரும் மூன்று அறைகளில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக்கிடந்துள்ளது. இதனால் யாரோ மூவரையும் கொலை செய்து விட்டு அவர்களை எரித்து சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.