உத்தரப்பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனும் துறவியின் மடம் அமைந்துள்ளது.

அதில் அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதில், ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறிய போது நெரிசல் ஏற்பட்டது.
தள்ளு முள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஆக்ரா மண்டல காவல்துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்;- “ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் சோகமானது.

இதயத்தைத் துன்புறுத்துகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும்,
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் லக்ஷமி நாராயண் சவுத்ரி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும்,
அதேபோல், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரும் அங்கு விரைய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.