படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று (ஜூலை 9) நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உண்மைநிலை வெளியே வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து அவரது உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூரில் புத்த மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பூர் அயனாவரம் பகுதியில் இருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்றார். அங்கு கண்ணீருடன் முறையிட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படத்திற்கு முதல்வர் மரியாதை மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் சேகர்பாபுவும் சென்றிருந்தார்.



Leave a Reply
You must be logged in to post a comment.